Connect with us

மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக – முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தல்

Featured

மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக – முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தல்

மக்கள் நலன், நாட்டு நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள்மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் 0. பன்னீர்செல்வம் வலியுடுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தி.மு.க. ஆட்சி என்றாலே, “மணல் கொள்ளை”, “ரேஷன் அரிசி கடத்தல்”, “வெடிகுண்டு கலாச்சாரம்”, “கொலை, கொள்ளை”, “பாலியல் துன்புறுத்தல்”, “போதைப் பொருள் விற்பனை” ஆகியவை தலைவிரித்து ஆடும் என்பதை அறிவார்ந்த தமிழக மக்கள் எளிதில் அறிவார்கள். அதுவும் கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் வரம்புமீறி சட்டவிரேரதமாக மணல் கடத்தல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. சிலரின் சுயநலத்திற்காக தமிழ்நாட்டின் கனிமவளம் கொள்ளையடிக்கப்படுகிறது.

மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில், சட்டவிரோதமாக மணல் எடுப்பதை உடனே நிறுத்தும் வகையில், மணல் குவாரிகளை பொதுப் பணித் துறை மூலம் மேற்கொள்ள 2003 ஆம் ஆண்டு ஆணையிடப்பட்டது. இதனை மாற்றி அமைக்கும் வகையில், மணல் குவாரிகளில் இருந்து மணலை எடுத்து விற்பனை செய்ய ஒப்பந்தப் புள்ளி மற்றும் பகிரங்க ஏலம் மூலம் நடத்த முந்தைய தி.மு.க. ஆட்சியில் 2008 ஆம் ஆண்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், மாண்புமிகு அம்மா அவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக இந்த முயற்சி கைவிடப்பட்டது.

தற்போது, மணல் குவாரிகள் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தாலும், மணல் குவாரிகளிலிருந்து சட்டவிரோதமாக அளவுக்குமீறி மணல் அள்ளப்படுவதாகவும், இதன்மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடைபெறுவதாகவும் புகார்கள் எழுப்பப்பட்டு, அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதில், 4,500 கோடி ரூபாய் அளவுக்கு சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் நடைபெற்றதையடுத்து, பத்து மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்களுக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது. இதற்கு எதிராக தமிழ்நாடு அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், சட்ட விரோத மணல் குவாரிகள் தொடர்பாக அமலாக்கத் துறை மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதற்கு தமிழ்நாடு அரசு ஏன் வழக்கு தொடர்ந்தது என்று வினவியதுடன், மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக அறிவுறுத்தியது. மாவட்ட ஆட்சியர்களுக்கு சம்மன் அனுப்பியதற்கு எதிராக தமிழ்நாடு அரசு வழக்கு தொடுத்ததிலிருந்தே, ஆளும் கட்சியினரின் அமோக ஆதரவுடன் மணல் கொள்ளை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது என்பது நிருபிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில், மணல் கொள்ளையை தடுத்ததற்காக, வெட்டிக் கொல்லப்பபட்ட சம்பவம், படுகாயமடைந்த சம்பவம், கொலை முயற்சி சம்பவம் போன்றவை அரங்கேறியுள்ளன. அந்த வகையில், அண்மையில், புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், வளையப்பட்டி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், அதனைத் தடுத்து நிறுத்தச் சென்ற கோட்டாட்சியர் மற்றும் இதர அரசு அதிகாரிகள் மீது கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. இதில் கோட்டாட்சியர் உட்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

See also  அடுத்தடுத்து எழுந்த குற்றச்சாட்டுகள் - உறுதுணையாக நின்ற நடிகர் சங்கத்திற்கு உருக்கமாக நன்றி சொன்ன நடிகர் தனுஷ்..!!

கோட்டாட்சியர் நிலையில் இருக்கும் அரசு அதிகாரியையே கொலை செய்ய மணல் கொள்ளையர்கள் முயற்சிக்கிறார்கள் என்றால், அந்த அளவுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு அவர்களுக்கு இருக்கிறது. ஆளும் கட்சியினரின் ஆதரவு இல்லாமல் இதுபோன்ற கொலை முயற்சி நடைபெற்றிருக்காது. மணல் கொள்ளையை ஊக்குவிக்கக்கூடிய, மணல் விலையை உயர்த்தக்கூடிய, அரசுக்கு வருவாய் இழப்பினை ஏற்படுத்தக்கூடிய செயலில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலன், நாட்டு நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுத்து, இனி வருங்காலங்களில் மணல் கொள்ளை நடைபெறாமல் பார்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அரசு அதிகாரிகளுக்கு உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என ஓபிஎஸ் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top